கிருபை என்றால் என்ன?
தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். "கிருபை" என்றால் "தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு" என்று பொருளாகும்.
தேர்வு எழுதியிருக்கிற ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வைத்து கொள்ளலாம். அவன் எழுதியிருப்பதற்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும். திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்களின் காரணமாக அவன் ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று கருதி +5 என்று சேர்த்து அவனை தேர்ச்சிபெறச் செய்கிறார். அந்த 5 மதிப்பெண்களைப் பெறுவதற்கு அவன் தகுதியில்லை. ஆனாலும் ஆசிரியரின் தயவினால் அவன் தேர்ச்சி பெறுகிறான். அவர் அவனுக்குக் கொடுத்த மதிப்பெண்களை "கிரேஸ் மார்க்" என்று சொல்வார்கள்.
அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை.
அந்த மாணவன் 30 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். ஆனால் நமக்கோ எந்த தகுதியும் இல்லை. அப்படியிருந்தும் தேவன் அவருடைய மிகுந்த கிருபையினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் சிலாக்கியத்தை பெற்றிருகிறோம். கிருபை என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் "தகுதியற்றவனுக்கு அருளப்பட்ட ஈவு" என்ற பொருள் நம்முடைய நினைவிற்கு வரவேண்டும்.
தேவனுடைய கிருபையை நினைத்து உள்ளம் உருகும் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?. "ஆண்டவரே! என் மீது கிருபை உள்ளவரே என்று நன்றி உணர்வோடு அடிக்கடி தேவனைத் துதியுங்கள்.
இரக்கம் என்றால் என்ன?
இரக்கம் என்ற வார்த்தையின் பொருள் "நமக்கு வரவேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக தேவன் நம் மீது காட்டும் பரிவு" ஆகும். கிருபை என்ற வார்த்தையின் பொருள் தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு என்பதாகும். ஆனால், இரக்கம் என்பது தண்டனை பெற வேண்டியவர்களுக்கு தண்டனை தராமல் காட்டும் அன்பு ஆகும்.
இரக்கம் என்ற வார்த்தையில் அனுதாபம்,தயவு காட்டுதல் என்ற பொருளும் அடங்கும்.