3. பேழை கட்டினது கிருபையே!
மனிதனுடைய அக்கிரமம் மிகுந்தது. நீதியுள்ள தேவன் நீதியை நிறைவேற்ற வேண்டி அவர்களை அழிக்கத் தீர்மானித்தார். ஆனால், நோவா குடும்பத்தையோ காப்பாற்ற எண்ணினார். நோவாவைப் பார்த்து தன்னுடைய திட்டத்தை பகிர்ந்து கொண்டார்.
“பேழையை உண்டாக்கு…
அறைகளை உண்டாக்கு…
கீல் பூசு…”
பேழையின் நீளம், அகலம், உயரம் (450 x 75x 45 அடி)
எல்லா ஜீவ ஜந்துக்களையும் ஜோடு ஜோடாக உள்ளே சேர்த்துக் கொள்ளவேண்டும்.
போஜன பதார்த்தங்களைச் அத்தனை மிருக ஜீவன்களுக்கும் சேர்க்க வேண்டும்…!
இத்தனை பெரிய பேழை கட்ட அந்நாட்களில் ஓர் வாளோ அல்லது சிறிய ரம்பமோ கிடையாது. இத்தனை பெரிய பேழையை கட்டுகிறதை தேவன் நம்மிடத்தில் கேட்டிருப்பாரென்றால் நாம் “முடியவே முடியாது” என்று சொல்லி இருப்போம். ஆனால் “நோவா அப்படியே செய்தான் தேவன் தனக்கு கட்டளையிட்ட படியெல்லாம் அவன் செய்து முடித்தான்” (ஆதி 6:22)
தானும் தனது மனைவியும், தனது 3 குமாரரும் அவர்கள் மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள். தனித்து ஊழியம் செய்யும் சகோதரனே! உங்கள் மனைவியை இணைத்துக்கொள்ளுங்கள். ‘ஆவிக்குரிய கூட்டம்!’ என்று தனித்து ஒடுகிற சகோதரியே! இது சரியல்ல. உங்கள் கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். இணைந்து செல்லவே வேத வசனம் சொல்லுகிறது. “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15).
120 ஆண்டுகள் கடின உழைப்பில் கட்டப்பட்டதுதான் இந்த பேழை. 24 மணி நேரத்தில் ஒரு வேளை 12 மணி நேரத்திற்கும் அதிகமாகவே உழைத்திருப்பார்கள். கூலிக்கும் ஆட்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு பிரசங்கமும் செய்தார். மிருகங்களுக்கு உணவு சேர்த்து வைக்க வேண்டிய கட்டளை. அதுவும் கடினமான வேலை. இத்தனை கடினமாக உழைத்து தேவ திட்டத்தை செயல்படுத்தினார். ஊழியம் செய்கிற சகோதரே! சகோதரியே! தேவன் தங்களுக்குத் தருகிற திட்டத்தில் ஊழியம் செய்யுங்கள். உங்கள் இஷ்டப்படி ஊழியம் செய்ய வேண்டாம்.
நேரம் வந்தபோது, நோவாவும் அவர் குடும்பத்தினரும் அந்த பேழைக்குள் பிரவேசித்தனர் பெருமழை வந்தது வெளியே இருந்த அத்தனை ஜீவன்களும் அழிக்கப்பட்டது! இத்தனை பெரிய பேழை செய்யப்பட்டதின் இரகசியம்: நோவாவும் அவன் குடும்பத்தினரும் காக்கப்படவே.
ஊழியம் செய்கிறது உலகத்திலே உன்னத கிருபை! ஊழியம் செய்யாமல் ஒதுங்கி நிற்கிற சகோதரரே! சகோதரியே! “எனக்கு வரங்கள் இல்லை! தாலந்துகள் இல்லை!” என்று சொல்லி ஆலய ஆராதனையில் மட்டும் பங்கு பெற்று விட்டு தூங்கி காணப்படுகிற நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை இழந்து வருகின்றீர்கள். ‘ஊழியம் மிகக் கடினம்’ என்று ஒதுங்க வேண்டாம். கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார். தேவன் உங்களுக்குத்தரும் ஊழியங்களை நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்? வாலிபத் தம்பியே! தங்கையே! நீ இருக்கிற இடத்திலும், படிக்கிற கல்லூரியிலும் உடனே ஓர் ஜெபக்குழுவை ஆரம்பி! தேவன் உன் கரத்தில் ஊழிய வாய்ப்புகளைத் தருவார்! நீ ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வேகமாக வளருவாய்!
.....( தொடரும் )